மழை என்பது யாதெனின்

 

மழை lifestyle tamil rain poetry கவிதை  தமிழ்
ப. உ: இணையம்

சாலையோரக் கடைகளின்
நீல நிற தார்பாலின்கள்
சரசரவென கீழிறங்கும்.
ஒய்யாரமாய் ஊரெங்கும்
ஓடித்திரிந்த ஊர்திகள்
ஊரடங்கு போலொதுங்கும்.
மலர்ந்திருந்த சாளரங்கள்
கணப்பொழுதில் இதழ் குவிக்கும்.
உப்பரிகையின் உலர்கொடிகள்
ஒரு நொடியில் துகிலுரியும்.
டீக்கடை, பயணியர் நிழற்குடை
இவை இருகரம் விரிக்கும்.
ஒண்டுக்குடித்தனமோ ஓட்டுக்கூரையோ
புகலிடத்தின் பொருள் விளங்கும் …
மழை என்பது யாதெனின், மானுடம் கூடடைதல்.

இருளும் முன்னே
உணரும் புலமை.
ரீங்கார பாடலும்,
ஆடலும் இனிமை.
ஊர்ந்தும் பறந்தும்
மறைவிடம் சேரும்.
தெருவிலே வாழினும், சொட்ட 
நனையுதா விலங்கினம்?
புழுதி வெப்பமடங்கி
பூமியும் குளிரும்.
மண்ணும் விண்ணும்
நுண்ணுயிரும் கலந்து
தளிரொன்று புதிதாய் மிளிரும் …
மழையென்பது யாதெனின், பல்லுயிர் புரிதல்.

மழை lifestyle tamil rain poetry கவிதை  தமிழ்
ப. உ: இணையம்

அவனும் அவளும் 
அவரவர் உலகில் வாழும் அவ்வூரில்,
பொழிந்த வண்ணமாய்
இருக்கிறது மேகம்.
ஓராயிரம் துளிகளில்
தமக்கான ஓர் துளி
விழுவதை அறிந்திடும் நேசம்
 எழும் இதுவரை இலா மண்வாசம். 
ஓரிரு  காதமோ,
ஒரு மணி தூரமோ
ஈருலகின்  எல்லை?
ஏனோ, இவ்வெளி மட்டும்
என்றுமே தீராப்பாலை…
மழை என்பது யாதெனின், நினைவுகள் நனைதல்.

அணைகள் உடைத்து
கரைகள் கடந்து
காடாகும் வெள்ளம்.
மலைகள் மரித்து,
நிலங்கள் சரிந்து
சேறாகும் பள்ளம்.
ஆர்ப்பரித்தும் உயிர் பறித்தும்
அடங்க மறுக்கும் கோபம்.
இது புரிதலில்லா புண்ணியர்
செயலால் விளைந்த சாபம்.
வார்தா என்றும் அசானி என்றும்
சூட்ட பல நாமம்.
காலநிலை மாற்றம் கொடுத்ததோ
கணக் கில்லா சேதம் …
மழையென்பது யாதெனின்,புயலன்றி பூச்சொரிதல்.


மழை lifestyle tamil rain poetry கவிதை  தமிழ்
ப. உ: இணையம்

  
அலுவல் முடித்து அறை திரும்பும்

ஓர் பழகிய மாலை,

பசியாற புகுந்த பவனமே

உனைக்கண்ட அழகிய வேளை.

சலசலவென இரைச்சல்  

கூடத்தின் நாற்புறமும்.

ஓர் மூலையில்

நீயும், மூன்று நாற்காலிகளும்.

ஆழ்ந்த வாசிப்பில்

அமிழ்ந்திருந்த உன்னிடம்,

"அமரலாமா?" என்றதே

இன்று போல் ஞாபகம்.

நம் உரையாடல் தொடங்கிய தருணம்

மென்தூறல் இசைத்தது வானம் …

மழையென்பது யாதெனின், மனங்கள் மொழிதல்.  


நீர் ஆவியாகி 

அதுவே பின் நீருமாகும். 

மலர் கனியாகி 

கனிக்குள் விதையாகி 

அவ்விதையே விருட்சமாகும். 

ஒன்று மற்றொன்றாகி 

அதுவே பின் அவ்வொன்றாகி,

யாவற்றுள்ளும் அவையே 

யாவுமாகும் சூட்சுமம்.

சிறியதும் பெரியதும் தேடி ஓய்ந்து 

பின் அரிதினும் அரியதை

தன்னுள் காணும் நாட்டம்.

இதை உரைக்கவே நிகழ்த்தும் 

அண்டம் இப்பேரரங்கேற்றம் …

மழை என்பது யாதெனின்,

            மாயைகள் மறைதல்

            தன்னொளி தானுணர்தல்.

மழை lifestyle tamil rain poetry கவிதை  தமிழ்
ப. உ: இணையம்



Comments